பிறந்தவன் எவனும் உழைக்கவேண்டும். உழைப்பு உலகத்தில் அவதரித்த ஒவ்வொரு ஜீவனுக்கும் கடமை. அதை செயலாக்கும்போது பிறருக்கு உபயோகமாக, உதவியாக, இருக்கவேண்டும் என்பது நியதி. இதையே '' தனக்கென வாழா பிறர்க்கென'' என்று சொல்வார்கள். இதுவே தியாகம் எனப்படும். கொடுப்பதில் உள்ள இன்பம் பெறுவதில் இல்லை. இதை புண்யம் என்றும் சொல்கிறோம். பலன் எதிர்பாராமல் உழை என்கிறார் கண்ணன் கீதையில். அது ஒரு தனி சுகம்.
உழைப்பு ஊழியனை உயர்த்தும், உச்சாணி கிளையில் அமர்த்தும். உண்மை உழைப்பு உள்ளத்துக்கு தெம்பைத் தருமே. ஊரே போற்ற வைக்குமே.
உழைப்பதில் உற்சாகம் இருக்கவேண்டும். உழைப்பு ஒருவனை உயர்த்தும். இதை ஒரு கதையாக சொன்னால் அழகாக இருக்காதா?
அங்கப்பன் அமேரிக்கா போனான்.
அவன் படிச்ச படிப்புக்கு ரொம்ப பெரிய வேலை எல்லாம் கிடைக்காதுன்னு அவனுக்கே தெரியுமே. ஒரு ரொம்பவே பெரிய ''அ'' முதல் ''அக்'' வரை விற்கும் பல மாடிக் கட்டிட பல சரக்கு கடையில் சேல்ஸ் மேன். அங்கே இன்னும் கடவுள் படைக்காத வஸ்துக்கள் கூட கிடைக்கும் என்பார்கள்.
பட்டைக் கண்ணாடி, சுருட்டுபுகை, வெள்ளை கருப்பு மீசை தாடி, கண்ணைக் கூசும் பள பள வழுக்கை மண்டை , கடோத்கஜ உருவம் தான் முதலாளி. மேலும் கீழும் சுற்றிக் கொண்டே இருப்பான். பார்வை எங்கு எவன் என்ன வேலை செய்கிறான், எப்படி செய்கிறான் என்று கவனிக்கும்.
அங்கப்பனை ஏற இறங்கப்பார்த்து '' இதுக்கு முன்னாடி எந்த வியாபாரம் பார்த்தே?''
"சென்னைலே ஒரு பெரிய 7 மாடி கட்டிட வியாபார ஸ்தலம்''
"நாளை காலைலேருந்து வேலைக்கு வா '' - அங்கப்பனைப் பிடித்து விட்டது அமெரிக்கனுக்கு.
மறுநாள் அவனுக்கு கடினமான நாளாக துவங்கியது. பரவாயில்லை சமாளித்து விட்டான். .
சாயந்திரம் 6மணிக்கு சுருட்டு அவனிடம் வந்து விட்டான்.
''இன்னிக்கு எத்தனை வித்தே ?"
"ஒன்னு தான் அய்யா படிஞ்சுது ''என்றான் அங்கப்பன்.
"என்ன, காலேலேர்ந்து ஒன்னே ஒன்னு தானா ? ச்சே! இதோ பார் என் வேலைக்காரன் எல்லாருமே தெனமும் குறைஞ்சது 20-30 சாமான் விக்கரவனுங்க . இந்த வேலை உனக்கு நிலைக்கணும் என்றால் உன் வேலையை ஜாக்ரதையா பொறுப்பா செய். நிறைய விற்பனை காட்டு." அதிருப்தி அமெரிக்கன் குரலில் தெரிந்தது.
''சரிங்க ஐயா''
அது போகட்டும். ஒரூ கஸ்டமர் தான் என்று சொன்னியே. என்ன வித்தே , எவ்வளவுக்கு?'' .
" 93300534.00 டாலருங்க " .
" இன்னாது? " என்ன சொல்ற நீ. எப்படிப்பா? " இப்போது சுருட்டு திகைத்தது.
" ஒரு கஸ்டமர் வந்தார். மீன் பிடிக்கற ஊக்கு வித்தேன். சின்னது, நடுத்தரம், பெருசு மூணு கொடுத்தேன். அப்புறம் அந்த ஊக்கை மாட்டி மீன் பிடிக்க ஒரு பெரிய வெள்ளி முலாம் பூசிய இரும்புக்கோல்,
அப்புறம் மீன் பிடிக்கிற உபகரணம் கொஞ்சம். இதெல்லாம் அவருக்கு விக்கும்போது ''சார், எங்க போய் மீன் பிடிக்கப்போறீங்க? என்று கேட்டேன். தெரியலே என்றார்.
கீசக்கரை போங்க . அங்கே ஆழம் ஜாஸ்திங்க. ஒரு போட் எடுத்துப்போனீ ங்கன்னா நல்லா சௌரியமா கொஞ்சம் உள்ளே போய் ஆழத்திலே நல்ல மீன் நிறைய புடிக்கலாமுங்களே. நம்ம கிட்டே சல்லிசா நல்ல போட்டுங்கல்லாம் இருக்கே வாங்க காட்றேன்'' என்று அவரை 11 வது மாடிக்கு அழைச்சிட்டு போனேன்.
ஒரு 20 அடி நீள ரெட்டை இஞ்சின் நீள மீன் பிடிக்கிற படகு அவருக்கு புடிச்சுது.
தலையைச் சொரிஞ்சார் .''
சார் என்ன யோசிக்கிறீங்கன்னு கேட்டதுக்கு. என்கிட்டே இருக்கிற ஓக்ஸ் வாகன் கார் இந்த சக்கரம் வைச்ச படகை இழுக்காதே என்று தான் யோசிக்கிறேன்'' என்றார்.
இதுக்கு வேறே ஒரு வழி இருக்குங்களே. வாங்க'' என்று அவரை 13 வது மாடிலே இருக்கிற டீலக்ஸ் 4x 4 ப்ளேசர் வண்டியைக் காட்டி '' இது உங்களுக்கு ஜோரா உதவுமே சார். கண் மூடி கண் திறகிறதுக்குள்ளே காத தூரம் இழுத்துக்கிட்டு ஓடும் '' அப்பறம் கூட இதுக்கு பணம் கொடுக்கலாம். மீன் எல்லாம் பிடிச்சுட்டு சந்தோஷமா வாங்க ''
பேச்சு வாக்கிலே ''எங்க நீங்க தங்குவீங்க கீழக்கரையிலே ?''என்று கேட்டதுக்கு நல்ல ஓட்டல் எல்லாம் அங்கே இல்லப்பா'' அப்படினார்.
''இது ஒரு ப்ராப்ளமே இல்லை சார். எங்க டேரா டிபாட்மெண்ட் வந்து பாருங்க. வேணுங்கற சைஸ்லே நாமே டென்ட் போட்டுக்கலாம். உள்ள எள்ளல வசதியும் இருக்கிற மாதிரி டிசைன் இருக்குதுங்க. வாடகையும் மிச்சம், சேப்டி . நமக்கு தேவையான நேரம் இருக்கலாம்''
''தம்பி நீ பலே ஆளுப்பா. நல்லாவே யோசிக்கறே. என்று சிரித்து முதுகிலே தட்டினார். டென்ட் எல்லாம் 15வது மாடிலே காட்டினேன். ஆறு பேர் தங்கறாப்பலே நம்முடைய இக்ளூ டென்ட் வித்தேன். அதிலே 3 நாள் தேவைப்படற குடிக்கிற,கடிக்கிற வஸ்து, சாப்பிடற ஆகாரம் எல்லாம் பொட்டலம் கட்டி கொடுத்தேன்'' எல்லாம் சேர்த்து மொத்தம் ஒ பில்லு 93, 300,534.00 டாலருங்க
அமெரிக்க மொட்டை பாஸ் கீழே விழாமல் ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு கண்ணைத் துடைத்துக்கொண்டு அங்கப்பனைப் பார்த்தான்.
''ஏம்பா ஒரு மீன் பிடிக்கிற ஹூக் வாங்கவந்தவன் கிட்ட இந்த வியாபாரம் எல்லாம் பண்ணியா? நம்பவே முடியல்லைப்பா!''
இல்லீங்க, அவரு ஹூக் வாங்க வரலை.
பின்னே?
தலைவலி மாத்திரை ரெண்டு கேட்டார். நான் தான் கொஞ்சம் ரிலாக்ஸா எங்கயாவது பக்கத்துலே நீர் நிலைலே மீன் பிடிச்சா மனஸ் சந்தோஷப்படும். தலை வலி பறந்து போகும். நிறைய உங்க போல பெரிய மனுஷங்க அதை தானே பண்றாங்க என்று ஐடியா குடுத்தேன்.
அமெரிக்கன் அங்கப்பனை அணைத்துகொண்டே 22வது மாடிக்குப் போனான். அங்கே ஒரு பெரிய ஒரு அறைக்குள் நுழைந்து ஒரு பெரிய கட்டில் மாதிரி இருந்த விலையுயர்ந்த சேர் மீது அவனை அழுத்தி உட்கார வைத்தான். அறை வாசலில் சேர்மன் என்று எழுதியிருந்தது.